Site icon Tamil News

இலங்கையில் மிளகாய் ஐஸ்கிரீம் கண்டுப்பிடிப்பு

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இயங்கும் விவசாயத் துறை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதிப் பங்களிப்பின் கீழ் முதன்முறையாக மிளகாயிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்துவதற்கு வெலிமடை தரகலவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான லசந்த ருவன் லங்காதிலக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவரால் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் ஐஸ்கிரீம் நேற்று (27) விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய இராஜாங்க அமைச்சர் மோகன் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த மிளகாய் ஐஸ்கிரீம் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இனிப்பு மற்றும் காரமான மிளகாயை இணைத்து புதிய சுவையுடன் இந்த ஐஸ்கிரீமை சுவைக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

ஊவா பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பீடத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்த மிளகாய் ஐஸ்கிரீம் செய்முறை பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, செய்முறை வெற்றியடைந்துள்ளதால், இந்த தயாரிப்பை சந்தைக்கு அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விதைகளைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் காய்ந்த மிளகாயின் பட்டையைப் பயன்படுத்தி இந்த உப தயாரிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர் மற்றும் பெரியவர்களுக்காக இரண்டு வகையான பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்த மிளகாய் ஐஸ்கிரீம்கள் சந்தைக்கு வெளியிடப்படும் எனவும் ருவன் லங்காதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version