Tamil News

புதுக்குடியிருப்பை வந்தடைந்த திலீபனின் பவனி ஊர்தி …(Photos)

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் “திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் இன்று (19) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வந்தடைந்திருந்தது.

திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது புதுக்குடியிருப்பு சந்தியினை வந்தடைந்தது. பின்னர் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வோடு இன்றைய ஊர்திப் பவனியானது முல்லைத்தீவு நகர்பகுதியை நோக்கி நகர்கின்றது.

இந்நிலையில் பொத்துவில் பகுதியில் கடந்த 15ம் திகதி பயணத்தை ஆரம்பித்த இந்நினைவு ஊர்தியானது இறுதியில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவுத்தூபியை சென்றடையவுள்ளது.

இன்றையதினம் புதுக்குடியிருப்பை வந்தடைந்த ஐந்தாம் நாள் பேரணியானது முள்ளிவாய்க்கால், கொக்குளாய், கொக்குதொடுவாய் பகுதிகளின் ஊடாக நெடுங்கேணியை சென்றடைய இருக்கின்றது.

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு நேற்று திங்கட்கிழமை (18) உத்தரவு பிறத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version