Site icon Tamil News

டெல்லி- 2,300 ரூபாய்க்காக நடந்த கொலை: 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

டெல்லியில் ரூ.2,300 பணத்துக்காக 20 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் உள்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் ரூ.2,300 பணத்துக்காக, ஏற்பட்ட தகராறில் பிரியன்ஷு (20) என்ற இளைஞரை, சுற்றி வளைத்து கடுமையாக சிலர் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி பிரியன்ஷு நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் பிரியன்ஷுவின் நண்பர் ஜெய்கிஷன் (எ) சிண்டு என்பவர் பொலிஸில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார், “கடந்த 11-ம் திகதி அன்று காலை 11.30 மணிக்கு ரோஹித் கவுர் (22), ஆஷிஷ் (எ) அன்ஷு ஆகியோருக்கும், பிரியன்ஷுவுக்கும் ரூ.2,300 பணத்துக்காக தகராறு ஏற்பட்டது. அப்போது ரோஹித் கவுர், ஆஷிஷ் ஆகியோருடன் மேலும் சிலர் சேர்ந்து பிரியன்ஷுவை கடுமையாக தாக்கினர். இதனால் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார். ஜெய்கிஷன் அளித்துள்ள வாக்குமூலத்தில் இந்த விவரங்கள் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ரோஹித் கவுர், ஆஷிஷ் மற்றும் இரு சிறுவர்களை கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

Exit mobile version