Site icon Tamil News

கோடி கணக்கான WhatsApp கணக்குகள் முடக்கம்

உலக அளவில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான WhatsApp கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதற்கான காரணம் என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

உலகிலேயே அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான WhatsApp, தங்களின் பயனர்களுக்காக பல புதிய அம்சங்களை அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுதவிர WhatsApp நிறுவனம், ஒவ்வொரு நாட்டின் அரசாங்க விதிமுறைகளின் படி சில விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன. அந்த விதிகளை மீறும் வாடிக்கையாளர்களின் கணக்குகள்தான் தற்போது முடக்கப்பட்டு வருகின்றன.

வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 67 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸாப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுவே பிப்ரவரியில் 76 லட்சம் WhatsApp கணக்குகள். மேலும் மார்ச் மாதத்தில் 29 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் என கடந்த மூன்று மாதங்களில் மொத்தமாக 2 கோடிக்கும் அதிகமான வாட்ஸப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுவே கடந்த ஆண்டு 2023-ன் தொடக்க மூன்று மாதங்களில் சுமார் 1 கோடியே 20 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. WhatsApp நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஒருவேளை உங்களது WhatsApp கணக்கு முடக்கப்பட்டிருந்தால், கீழே குறிப்பிட்டுள்ள பாப் அப் செய்தி உங்கள் வாட்ஸ் அப்பை திறந்ததும் உங்களுக்கு தோன்றும். அதாவது உங்களது WhatsApp கணக்கு பயன்படுத்துவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை நீங்கள் பார்ப்பீர்கள்” என அவர்களது வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடுக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது WhatsApp கணக்கை விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தியதை WhatsApp நிறுவனம் உறுதி செய்யும் பட்சத்தில், மற்ற பயனர்களின் பாதுகாப்பு காரணமாக அந்த குறிப்பிட்ட கணக்கு முற்றிலுமாக முடக்கப்படும். எனவே WhatsApp பயனர்கள் வாட்ஸ் அப்பின் விதிமுறைகளைப் படித்து அறிந்து கொள்ளுமாறு அனைவருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் WhatsAppஐ பயன்படுத்தும்போது விதிமுறைக்கு புறம்பாக எதையும் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு WhatsApp கணக்குகள் முடக்கப்படுவது அதிகரித்துக்கொண்டு போவதைப் பார்த்தால், ஆன்லைன் தளங்கள் எந்த அளவுக்கு மோசமாக மாறி வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற மெசேஜிங் செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எனவே சமூக வலைதளங்களில் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது போலவே இச்சம்பவம் உள்ளது எனலாம்.

 

Exit mobile version