Tamil News

ஸ்ரீதேவி மரணம் – முதன்முறையாக மனம் திறந்தார் போனி கபூர்

ஸ்ரீதேவி மரணம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த போனி கபூர், தற்போது முதன்முறையாக அதுபற்றி பேசி இருக்கிறார்.

1980-களில் தமிழ், தெலுங்கி, இந்தி என ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் தன் அசாத்திய நடிப்பால் கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி.

அந்த காலகட்டத்தின் லேடி சூப்பர்ஸ்டாரும் இவர்தான். சினிமாவில் பீக்கில் இருந்த ஸ்ரீதேவி கடந்த 1996-ம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

போனி கபூர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவராக இருந்தாலும் அவர்மீதுள்ள காதலால் அவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி – போனி கபூர் ஜோடிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தன் தாயை போல் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற தனது உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றபோது, அங்கு ஓட்டல் அறையில் உள்ள பாத் டப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஸ்ரீதேவியின் மரணம் எதிர்பாராமல் நிகழ்ந்தது என அறிக்கை மூலம் சொல்லப்பட்டாலும் அதில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இதற்கெல்லாம் விடைகொடுக்காமல் மவுனம் காத்து வந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தற்போது முதன்முறையாக தன் மனைவியின் மரணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது :

“ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அது தற்செயலாக நடந்த ஒன்று. என்னிடம் 24 முதல் 48 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது தொடர்ந்து மரணத்தை பற்றியே பேசப்பட்டதால், அந்த சமயத்தில் அதைப்பற்றி மேலும் பேச வேண்டாம் என முடிவு செய்தேன். இந்திய ஊடகங்களில் இருந்து அதிகளவில் அழுத்தம் இருந்ததன் காரணமாகவே இந்த அளவுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

அப்போது உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகப்படும்படியான விஷயங்கள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவரது மரணம் தற்செயலானது என அறிக்கை வெளியிடப்பட்டது.

ஸ்ரீதேவிக்கு அழகாக இருப்பதற்கு அவரின் டயட்டும் ஒரு காரணம். அழகை பராமதிப்பதற்காக அதிகம் மெனக்கிடுவார். அடிக்கடி பட்டினியாகவும் இருப்பார். திருமணத்துக்கு பின்னரே 2 முறை ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு இருமுறை சுயநினைவு இல்லாமல் இருந்தார்.

ஸ்ரீதேவி மரணத்தின் போது ஆறுதல் கூற வீட்டுக்கு வந்த நடிகர் நாகர்ஜுனாவும், ஒருமுறை ஷூட்டிங்கின்போது ஸ்ரீதேவி மயங்கி விழுந்து அவருக்கு பல் உடைந்ததாக என்னிடம் கூறினார் என தெரிவித்த போனி கபூர் ஸ்ரீதேவியின் டயட் பற்றி பேசுகையில், அவர் உப்பு இல்லாத உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுவார் என தெரிவித்தார். அவரது மரணம் இவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என போனி கபூர் கூறி உள்ளார்.

 

Exit mobile version