Site icon Tamil News

கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

கோவை அவிநாசி சாலை சித்ராவில் சா்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு இருந்து சென்னை, மும்பை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், சிங்கப்பூா், ஷாா்ஜாவுக்கும் நாள்தோறும் 35 – க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இங்கு எப்போதும் அதிக அளவிலான பயணிகள் வந்து செல்வா்.

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதோடு, நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அது வதந்தி என்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று காலை 7.30 மணி அளவில் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்து உள்ளது.

அதில் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அதனால் கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து உள்ளதாக இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பெயரில் மிரட்டல் வந்து உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் இது தொடர்ந்து விமான நிலைய வளாகம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது.

விமான நிலையம் முழுவதும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய்ப் பிரிவு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் படையினா் ஆகியோருடன் கோவை மாநகர போலீஸாரும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் கடந்த வாரம் மிரட்டல் விடுத்த நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பெயரில் வந்து உள்ளதால் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் பெயரில் மின்னஞ்சல் வந்து உள்ளதாகவும், அதில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அநீதி அதிகரித்து உள்ளதாகவும், இறைவன் உங்களை தண்டிப்பார் என்றும் காற்று, மேகம், வானம் போன்ற வாசகங்கள் உள்ளதாகவும் அது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Exit mobile version