Site icon Tamil News

திடீரென உச்சம் தொட்ட பிட்கோயின்!

கடந்த இரண்டு வருடங்களாக மந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பிட்காயின் விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்து 50000 டாலர்களை எட்டியுள்ளது. இதற்கு என்ன காரணம் தெரியுமா?

தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த விஷயங்களில் கிரிப்டோ கரன்சிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக பிட்காயின் என்ற ஒன்று வந்த பிறகுதான், கிரிப்டோ கரன்சி சந்தை சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து பல எழுச்சி மற்றும் வீழ்ச்சிகளை இந்த சந்தை கண்டுள்ளது.

2022ல் கிரிப்டோ கரன்சி சந்தை அதலபாதாளத்தில் இருந்தது. ஆனால் 2023 இரண்டாம் பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெறத் தொடங்கியது. அதன் பின்னர் சுறுசுறுப்பாக செயல்பட்டு, 40000 டாலர்களை எட்டிய பிட்காயின் தற்போது திடீரென 50000 டாலர்களை எட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் என்னவென்றால், அமெரிக்க பில்லியனர்களில் ஒருவரான பீட்டர் தியால், தனது பவுண்டர்ஸ் ஃபண்ட் நிறுவனத்தின் மூலமாக, கிரிப்டோ கரன்சியில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒட்டுமொத்தமாக முதலீடு செய்தார். இந்த செய்தி வேகமாக பரவியதைத் தொடர்ந்து கிரிப்டோ கரன்சி சந்தை சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாகவே பிட்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஐம்பதாயிரம் டாலர்களை எட்டியது.

பவுண்டர்ஸ் ஃபண்ட் நிறுவனம் 100 மில்லியன் டாலர்களை பிட்காயினிலும் மற்றொரு 100 மில்லியன் டாலர்களை ஈத்தரிலும் முதலீடு செய்தது. இதனால் கோமா மோடில் இருந்த கிரிப்டோ கரன்சி சந்தை உயிர் பெற்றது. என்னதான் 2021 நவம்பரில் பிட்காயின் அதன் அதிகபட்ச உச்ச விலையான 69000 டாலர்களில் இருந்தது என்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மந்த நிலையுடன் ஒப்பிடுகையில், இப்போது உடனடியாக ஐம்பதாயிரம் டாலர்களை எட்டி இருப்பதே மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பலரும் கிரிப்டோ கரன்சியில் மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதில் சந்தை அபாயம் அதிகம் இருப்பதால் முதலீடு செய்ய விரும்புபவர்கள் யோசித்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Exit mobile version