Tamil News

35 ரஷ்ய நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த ஆஸ்திரேலியா

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட்டோவில் இணைவதற்காக உக்ரைன் முயற்சி செய்து வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் களமிறங்கின. அவை உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதன்மூலம் ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் சமாளித்து வருகிறது.

17 மாதங்களை தாண்டி போர் தொடர்ந்து நடைபெறுவதால் இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் முக்கிய ஏற்றுமதி மையங்களாக இந்த இரு நாடுகள் இருப்பதால் அவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது.இதனால் கருங்கடல் ஒப்பந்தம் மூலம் அந்த தானியங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆனால் கடந்த 18ம் திகதி இந்த ஒப்பந்தம் காலாவதியானதாக ரஷ்யா அறிவித்தது. இதற்கு ஐ.நா மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.இந்தநிலையில் ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

அதன்படி ரஷ்யாவில் உள்ள 35 நிறுவனங்கள், முன்னாள் துணை பிரதமர்கள் ஆண்ட்ரே பெலோசோவ், டிமிட்ரி செர்னிஷென்கோ மற்றும் பெலாரசில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள் என 10 தனிநபர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி பென்னி வோங் தெரிவித்துள்ளார்.

Exit mobile version