Site icon Tamil News

Asia Cup – DLS முறையில் நேபாளத்தை வீழ்த்திய இந்தியா

ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்களை எடுத்தனர்.

போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவர்கள் தவிர, ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்நிலையில், இந்திய அணி 2.1 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியதுடன் ஓவர்கள் குறைக்கப்பட்டது. மேலும், இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அசத்தலாக விளையாடினர். அவ்வபோது 6, 4-களை அள்ளி வீசினர்.

இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

இதன்மூலம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version