Site icon Tamil News

வடக்கு, கிழக்கில் தடைகளைத் தாண்டி நினைவேந்தலுக்கு ஏற்பாடு

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் காணப்படுகின்ற துயிலுமில்லங்களில் மாவீரர்களை நினைவேந்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் நிறைவடைந்துள்ளது.

தடைகளைத் தாண்டி இன்றையதினம் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதற்கு அமைவாக, யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் துப்புரவுப்பணிகள் நிறைவடைந்து நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

இதனைவிடவும், நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக, மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு அங்கு அஞ்சலி நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக கடந்த 21ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றன.

அத்துடன், வடமராட்சி- நெல்லியடி மாலி சந்தி பிள்ளையார் கோவில் முன்பாக, மாவீரர் நினைவாலயம் பொதுமக்கள் அஞ்சலிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு பெருமளவானவர்கள் மாலையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Exit mobile version