Site icon Tamil News

பொது இடத்தில் பேசுவதற்கு பயப்படுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

பொது இடத்தில் பயமின்றி பேசுவதற்கு எளிதான 5 வழிகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

பேச்சுரிமை என்பது உலகில் பெரும்பாலான நாடுகளில் பரவலாக இருக்கும் சுதந்திர மாண்புகளில் ஒன்று. ஆனால் அப்படி இருந்தும், நம்மில் பெரும்பாலானோர், நாம் பேசினால் தவறாகி விடுமோ? பதட்டத்தில் உளறினால் அவமானமாகி விடுமோ? யாரேனும் கிண்டல் செய்து விடுவார்களோ என நினைத்து நமக்கு எதுக்கு வம்பு என பேசாமல் இருந்து விடுவர். மேலும் நன்கு பேசும் பேச்சாளர்களை வியந்து பார்த்து கொண்டிருப்பர்.

இப்படியான சூழலை எதிர்கொண்டு அதில் இருந்து எப்படி பயமின்றி வெளியே வந்து பொதுவெளியில் பேசலாம் என்பதை டேல் கார்னகி (Dale Carnegie ) எனும் எழுத்தாளர் எழுதிய The Quick and Easy Way to Effective Speaking எனும் புத்தகத்தில் எளிதாக குறிப்பிட்டுள்ளார். அதில் இருந்து முக்கியமான 5 வழிகளை இதில் காணலாம்….

பொதுமேடைக்கு பயம் :
அரசியல் அல்லது பொது மேடை பேச்சாளர், நடிகர்கள் அனைவருமே முதல் மேடை பேச்சுக்கு தயங்கியவர் கள் தான். அவர்கள் அந்த தயக்கத்தை விட்டொழித்து மீண்டும் மீண்டும் மேடையேறியதால் தான் தற்போது திறமையான பேச்சாளர்களாக உள்ளனர். இது மேடை பேச்சுக்கு மட்டுமல்ல ஒரு பொதுவான கூட்டத்தில் பேசுவதற்கும் உதவும்.

என்ன பேச வேண்டும்.?
நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை நம்மால் பேச முடியாது. அது ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்று தான். ஆனால், நமக்கு நன்கு தெரிந்த ஒரு விஷயத்தை பொதுவெளியில் பேச தயங்கவே கூடாது. நமக்கு தெரிந்த விஷயத்தில் நாம் என்ன பேச போகிறோம்.? யார் கேட்க போகிறார்கள் என்பதை தெரிந்து தெளிவாக பேச திட்டமிட வேண்டும்.

கதைகள் :
நமக்கு தெரிந்த விஷயத்தை பேச போகிறோம். அதனால் அப்படியே புத்தகம் போல சொல்லி விடுவோம் என்றால் அது எந்த இடமாக இருந்தாலும் அவர்கள் உங்களை ஒரு சில நிமிடங்களில் கவனிக்க தவறிவிடுவர். இதனை தடுக்க சிறந்த வழி கதை கூறுவது தான். ஒரு விஷயத்தை நாம் சொல்ல போகிறோம், அதனை ஒரு சம்பவம் வழியாக கூறினால் நீங்கள் சொல்வதை அனைவரும் கவனிப்பதோடு அதனை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடமாட்டார்கள்.

நாடக தன்மை :
எப்படி கதை கூறுவது பேச்சாற்றலில் முக்கிய பங்கு வகிக்கறதோ அதே போல இந்த நாடகத்தன்மையும் மிக முக்கியமான விஷயம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பட்டிமன்ற பேச்சாளர்களை கவனித்து இப்போம். அவர்கள் வீட்டில் சாதாரணமாக நடந்த விஷயத்தை, அவர்கள் வீட்டில் மட்டுமே அப்படி நடக்கிறது என்பது போல அதில் சில நாடகத்தன்மையை புகுத்தி அந்த சம்பவத்தை நம் மனதில் எளிதில் பதித்து விடுவர். அதனை நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மைகள் உடன் ஒரு சில நம்பகமான யாருக்கும் பாதிப்பில்லாத பொய்களை கலந்து பேசிவிட வேண்டும்.

நமது பேச்சின் நன்மைகள் :
நாம் என்ன பேச போகிறோம், நமக்கு என்ன தெரிந்து இருக்கிறது, அதனை எவ்வளவு சுவாரஸ்யமாக பேச போகிறோம் என்பதை போல , அதனால் யார் பயனடைய போகிறார்கள், நமது ஆடியன்ஸ் யார்.? நாம் இந்த இடத்தில் இதனை கூறினால் சரியாக இருக்குமா என ஆராய்ந்து பேசுவது. அதாவது நீயா நானா நிகழ்ச்சியும் பார்த்து இருப்போம், காமெடி நிகழ்ச்சிகளும் பார்த்து இருப்போம். காமெடி நிகழ்ச்சி நம்மை சிரிக்க வைத்தாலும் அது சிறுது காலமே நினைவில் இருக்கும். அதுவே நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் (ஒரு சில எபிசோடுகள்) நமக்கு தேவையான கருத்துக்களை கூறுவதால் அவை ஆண்டுகள் கடந்தும் நமது சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

குறிப்பு :
நமது பேச்சாற்றலை திறம்பட மேம்படுத்த மேடை அல்லது பொதுவெளி பயத்தை அனுபவம் மூலம் தகர்க்க வேண்டும், என்ன தெரியுமோ அதனை தைரியமாக பேச வேண்டும். சுவாரஸ்யமாக பேச வேண்டும். நாம் பேசுவதால் எதிரில் இருப்பவர்களுக்கு சிறுது பலன் இருக்க வேண்டும். இது தெரிந்தாலே நமது பேச்சாற்றல் நிச்சயம் மேம்படும்.

Exit mobile version