Site icon Tamil News

எந்த ஒரு செயலையும் தள்ளிப்போடும் பழக்கத்தை கொண்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் தள்ளிப் போடும் பழக்கத்தை இன்று தள்ளி விடுங்கள். வாழ்க்கையில் அது உங்களை அடுத்த கட்டத்திற்கு தள்ளிவிடும். நீங்கள் சோம்பேறித்தனமாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு செயலையும் தள்ளிப்போடு பழக்கம் உருவாகும். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தால் நிச்சயம் இந்த பழக்கம் ஏற்படும்.

1. என்ன செய்வது என தெரியாமல் இருப்பது தள்ளி போடும் பழக்கத்திற்கு காரணமாக இருக்கும். உங்களுக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும். அது வெறும் ஆசையாக இல்லாமல் லட்சியமாக இருக்க வேண்டும். தன் எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும். பிறகு அதை செயல்படுத்த வேண்டும்.

இங்கு முதல் அடி எடுத்து வைப்பது தான் கடினமாக இருக்கும். பிறகு மற்றவை எல்லாம் தானாகவே நடந்து விடும். நம் எண்ணங்களை மட்டும் அதே நோக்குடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

2. ஒரு சிலருக்கு பயம் கூட காரணமாக இருக்கலாம். அப்போ நீங்க உங்களுக்காக நேரம் ஒதுக்கி தனியாக அமர்ந்து யோசிக்க வேண்டும். உடல் பலவீனமாக இருப்பவர்கள் கடினமான பயணத்தை எதிர்கொள்ள முடியாது. அதுபோல் மனம் பலவீனமாக இருந்தால் கடினமான இலக்குகளை அடைய முடியாது.

ஒருவேளை நீங்கள் பார்த்து பயப்படும் நபரோ அல்லது செயலையோ நீங்கள் எதிர்கொண்டால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். ஒருவேளை அப்படி நடந்து விட்டால் அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்பதையும் யோசித்தால் அதற்கான தன்னம்பிக்கை தானே வரும்.

3. ஒரு செயலை துவங்குவதற்கு முன் அதை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் எல்லாமே கடினமாக தான் இருக்கும் பின்பு அது பழகிவிடும் என்று உங்களுக்கு நீங்களே கூறிக்கொண்டு செய்ய ஆரம்பியுங்கள் .

4. எப்போது பார்த்தாலும் சோர்வாக அல்லது மந்தமாக இருப்பது கூட ஒரு காரணமாக அமையலாம். அப்படி இருந்தால் அது அடுத்த வேலையை செய்யும் எண்ணத்தையே அழித்து விடும். புதிதாக எதுவும் செய்ய முடியாது. இதற்கான ஒரே தீர்வு உடற்பயிற்சியே ஆகும். உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை செய்து உங்கள் எனர்ஜியை அதிகப்படுத்த வேண்டும்.

5. எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு கொண்டவர்களுக்கு தள்ளி போடும் பழக்கம் இருக்கும். உதாரணமாக வாழ்க்கை தானே போற போக்கில் பார்த்துக் கொள்ளலாம். பிசினஸ் தானே அது பாட்டுக்கு நடந்து விடும் என மனப்போக்கு இருந்தால் எந்த ஒரு காரியத்தையும் அக்கறையாக செய்ய முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் அதிக அக்கறை எடுத்து செயல்படுத்த வேண்டும்.

ஒரு சிறு சோம்பேறித்தனம் தான் மிகப்பெரிய விபத்துக்கு வழி வகுக்கும். உதாரணமாக ஒரு சிறு கல் சேதம் அடைந்தால் அதை மாற்றாமல் விட்டால் அது அந்த தூண் சாய்ந்துவிடும். அந்த தூண் விழுந்தால் அந்த கட்டிடமே சேதம் ஆகிவிடும். இதனால் பேராபத்து கூட நேரிடலாம். அப்புறம் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்படுவது தான் பல விளைவுகளுக்கு காரணமாகிறது. ஆகவே தள்ளிப் போடும் பழக்கத்தை இன்றே தள்ளிவிட்டு நினைத்த செயலை அன்றே செய்து முடிப்போம்.

 

Exit mobile version