Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய பெண்

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் ஷெரின் ஜாக்சன். இவர் ஆஸ்திரேலியாவின் டப்போ மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

ஷெரின் கணவர் பெயர் ஜாக்சன் ஆகும். இந்த நிலையில் ஷெரின் வசித்து வந்த வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கி படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஷெரினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது அவர் மட்டுமே வீட்டில் இருந்திருக்கிறார்.

வீட்டில் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியின் போது தீயணைப்பு வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, அது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Exit mobile version