Site icon Tamil News

தாய் சித்திரவதை புரிவதாக யாழில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் ஒருவன் , தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து சித்திரவதை புரிவதாக கூறி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தான்.

சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவன் எனவும் , அவனது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும் , இங்கு இலங்கையை சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதேவேளை , சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு , கொழும்பில் இருந்து வெளியேறி மன்னார் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு எங்கே செல்வது என தெரியாததால் , பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான்.

சிறுவனின் தாயை பொலிஸார் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை செய்த வேளை சிறுவன் செய்யும் தவறுகளுக்கு தான் சிறுவனை தண்டிப்பதாக கூறியுள்ளார்.

அதனை அடுத்து சிறுவனை சமரசப்படுத்தி, தாயாரையும் எச்சரித்த பொலிஸார் , சிறுவனை தாயாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Exit mobile version