Tamil News

பவதாரணிக்கு ஏற்பட்ட நிலை? தீனா மீது கங்கை அமரன் பகீர் குற்றச்சாட்டு

தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தீனா செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் 4 ஆண்டுகள் இந்த சங்கம் இயங்கி வந்த நிலையில், தற்போது அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

இதிலும் தானே தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் எனக்கூறி இசையமைப்பாளர் தீனா தங்களிடம் கராராக கூறியதாக கங்கை அமரன் செய்தியாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி தீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கங்கை அமரன் முன்வைத்து உள்ளார்.

இது இளையராஜா அமர்ந்திருக்க வேண்டிய இடம். எங்கள் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வு பற்றி உங்களுக்கு தெரியும். அதனால் அவரால் வர முடியவில்லை. அவருக்கு பதில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் ஒருவருக்கு 2 ஆண்டுகள் தான் பதவி என்பது விதி.

ஆனால் இசையமைப்பாளர் தீனா தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்கனவே நான்கு ஆண்டுகள் தலைவராக பதவி வகித்துவிட்டார். இனியும் தான் ஆளப்போவதாக கூறுகிறார். ஒருவரே பதவி வகிப்பதைக் காட்டிலும் அனைவரும் பதவி வகித்து சங்கத்தை திறம்பட வழிநடத்த வேண்டும் என்பது தான் இளையராஜா போன்றவர்களின் கருத்து. இந்த யூனியனில் பல்வேறு முறைகேடுகளும் நடந்திருக்கின்றன.

கொரோனா காலகட்டத்தில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு பணம் கொடுத்ததாக கையெழுத்து போட்டு சில ஆவணங்களை சமர்பித்து உள்ளனர். அது இவர்களாக தயார் செய்த ஆவணங்கள். மறைந்த பவதாரிணியின் கையெழுத்தை அவருக்கே தெரியாமல் போட்டிருக்கிறார்கள். இதன்மூலம் ரூ.80 லட்சம் வரை அவர்கள் பணத்தை சுருட்டி இருக்கிறார்கள்.

பதவி போய்விட்டால் சிக்கி விடுவோமோ என்கிற பயத்தில் தான் மீண்டும் தலைவர் பதவியை புடிக்க தீனா திட்டமிட்டிருக்கிறார் என கங்கை அமரன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

Exit mobile version