Site icon Tamil News

கல்வித்துறையிலும் AI! புதிய வசதிகளை அறிமுகம் செய்யும் Google Bard

AI அடிப்படையில் செயல்படும் கருவிகளின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது. ChatGPT உடன் இணைந்து செயல்படும் கூகுள் பார்ட் என்ற Chatbot பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த கருவியில் வரவிருக்கும் புதிய வசதி மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என சொல்லப்படுகிறது.

என்னதான் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அனைவருக்கும் உதவியாய் உள்ளது என்றாலும், மறுபுறம் இதனால் பல ஆபத்துகளும் எதிர்மறை விளைவுகளும் ஏற்படும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட டீப் பேக் வீடியோக்கள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே இந்த தொழில்நுட்பத்தில் நன்மைகள் தீமைகள் என இரண்டுமே உள்ளது எனலாம்.

கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பல புரட்சிகரமான விஷயங்களை தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் தன்னுடைய சாட்பாட்டில் கொண்டு வரும் புதிய அம்சம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கப்போகிறது. ஆரம்பத்தில் Google Bard அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது இந்தியா உட்பட 108 நாடுகளில் கிடைக்கிறது.

மேலும் கூகுள் பார்டில் அவ்வப்போது புதிய வசதிகள் இணைக்கப்பட்டு பயனர்களை கவர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் மாணவர்களுக்கான வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின் உதவியால் அறிவியல், கணிதம் மற்றும் பல சிக்கலான கேள்விகளுக்கு எளிய முறையில் பதில்களைக் காண முடியும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

மாணவர்கள் தங்களுக்கான சிக்கலான கேள்வியை தட்டச்சு மூலமாகவோ அல்லது புகைப்படம் வாயிலாகவோ பதிவேற்றும் வசதியையும் அவர்கள் வழங்கியுள்ளனர். இது மாணவர்களுக்கு புரியும் வகையில் அட்டவணை வடிவிலோ அல்லது விளக்கப்படங்கள் வடிவிலோ பதில்களைக் கொடுக்கும் என்பதால், மாணவர்கள் எம்மாதிரியான கேள்விகளுக்கும் சரியான பதில்களைப் பெற முடியும்.

இதனால் கல்வித்துறையில் நுழைந்துள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மாணவர்களுக்கு பேருதவியாய் இருக்கும் என நம்பப்படுகிறது.

Exit mobile version