Site icon Tamil News

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிரடி சோதனை: 50 பேக்கரிகள் மீது வழக்குகள்

பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (05) அதற்கான சோதனைகளை ஆரம்பித்துள்ளது.

பேக்கரிகள் மற்றும் கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்டாத சுமார் 50 பேக்கரிகள் மீது சோதனை நடத்தப்பட்டு, அந்த பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் படி, ஒரு இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிக்கப்பட்டவை, பொதி செய்யப்பட்டவை, சேமிக்கப்பட்டவை, விற்பனைக்கு வழங்கப்பட்டவை, காட்சிப்படுத்தப்பட்டவை, சில்லறை அல்லது மொத்தமாக விற்கப்பட்டவை என அனைத்து வகையான பாண்களும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையான எடைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை வலியுறுத்துகின்றது.

அத்துடன் பாணின் எடை தெளிவாக காணக்கூடிய வகையில் காட்சிப்படுத்துமாறு அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சந்தையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் தரப்படுத்தலை ஊக்குவிப்பதன் மூலம் நுகர்வோருக்கு பயனளிக்கின்றதாக வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Exit mobile version