Site icon Tamil News

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை!

கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை ஆராய்ந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்த மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குமாறும், அந்த நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் ஏனைய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் 16 பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளம், பலத்த காற்று, மண்சரிவு, கடும் மழை, பாறை சரிவு மற்றும் மரங்கள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக 2,350 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 9,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 399 ஆகவும், மற்ற சொத்து சேதங்கள் 37 ஆகவும் உள்ளது.

6,967 குடும்பங்கள் மற்றும் 25,553 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகளை இராணுவம் சமைத்த உணவை வழங்கி வருகிறது.

இதேவேளை, வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பட பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கான விசேட நிவாரணத் திட்டத்தையும் இராணுவம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 06 பூட்டுகள் மற்றும் 03 இயந்திர படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அவசர காலங்களில் மக்களை மீட்பதற்காக விசேட இராணுவ வாகனங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தின் அவசர நிலைகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை அறிய மேஜர் ஜெனரல் ஜானக ரணசிங்க (0766907042), கேணல் ரொஷான் கன்னங்கர (0766907146) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

Exit mobile version