Tamil News

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா… 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார், மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (02) காலை 6.15 மணியளவில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்தை தொடர்ந்து, நவநாள் ஆராதனை திருப்பலிகள் இடம்பெற்றதையடுத்து, சனிக்கிழமை (1) மாலை வேஸ்பர்ஸ் ஆராதனை நடைபெற்றது.

அதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (2) காலை 6.15 மணிக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் அருட்திரு அன்ரன் ரஞ்சித் அடிகளார் மற்றும் மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், குருக்கள் இணைந்து ஆடி மாத திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, மடு அன்னையின் ஆசீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளடங்கலாக சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், 1924ஆம் ஆண்டு மருதமடு திருத்தலத்தில் பல ஆயர்கள் சூழ மடு அன்னைக்கு முடிசூட்டு விழா இடம்பெற்றது. இந்த முடிசூட்டு விழாவின் நூற்றாண்டு நிறைவு யூபிலி பெருவிழாவாக எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொண்டாடப்படவுள்ளது.

அதனை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (2) திருவிழாவின்போது மன்னார் மறை மாவட்ட ஆயர் யூபிலி நூற்றாண்டு விழாவினை பிரகடனம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது. பின்னர், விசேடமாக யூபிலி ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, அதனை வெளிப்படுத்தும் முகமாக வருடம் முழுவதும் பறக்க விடப்படுகின்ற யூபிலி கொடி மருதமடு திருத்தல முன் மண்டபத்தில் ஏற்றப்பட்டது.

Exit mobile version