Site icon Tamil News

கட்டுநாயக்கவில் போலி விசா மூலம் இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது

போலியாக தயாரிக்கப்பட்ட விசா மூலம் இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் நேற்று (8) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 06.40 மணிக்கு கத்தாரின் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-217 இல் பயணிப்பதற்காக குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அங்கு குறித்த இளைஞன் தனது அனுமதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விமான நிலையத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு, குடியகல்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனையில், குறித்த இளைஞன் தம்வசம் வைத்திருந்த போலாந்து குடியுரிமை விசா போலியாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதியானது.பின்னர் குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி விசா 40 இலட்சம் ரூபாய்க்கு ஒரு தரகரிடமிருத்து தான் பெற்றுக்கொண்டதாக அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞன் பயணத்திற்காக எடுத்துவந்த , பயணப் பை மற்றும் கைப்பையை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.இதன்போது, குறித்த இளைஞனிடம் இருந்த கைப் பையில் மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட சில ஆவணங்களும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.இதனையடுத்து,குறித்த இளைஞனைக் கைது செய்த குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு அதிகாரிகள், அந்த இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Exit mobile version