Tamil News

பெங்களூரில் பிரபல உணவகத்தில் வெடித்த மர்ம பொருள் – நால்வர் படுகாயம்!

பெங்களூரு நகரில் பிரபல உணவகம் ஒன்றில் மர்ம பொருள் வெடித்து சிதறிய விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பெங்களூரு நகர மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள இந்த உணவகத்தில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் இன்று மதியம் ஏராளமானோர் சாப்பிடுவதற்காக உணவகத்தில் காத்திருந்தனர்.

மதியம் 12:56 மணியளவில் திடீரென உணவகத்தில் மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, உணவக ஊழியர்கள் மூன்று பேர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் என 4 பேர் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பிரபல உணவகத்தில் வெடித்த மர்ம பொருள்

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், சிலிண்டர் விபத்து எதுவும் நேரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மர்ம நபர்கள் யாரேனும் உணவகத்தில் வெடிபொருளை வைத்து சென்றனரா என்கிற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் வெளியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அந்த சாலைக்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு, அப்பகுதியானது பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version