Site icon Tamil News

ஆப்பிரிக்காவில் விரைவில் தொடங்கவுள்ள குரங்கம்மைத் தடுப்பூசி போடும் பணிகள்

அடுத்த சில நாள்களில் காங்கோ ஜனநாயகக் குடியரசிலும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் குரங்கம்மைத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கக்கூடும் என்று ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையம் ஆகஸ்ட் 20ஆம் திகதியன்று தெரிவித்தது.

தடுப்பூசி பணிகளைத் தொடங்கும் நோக்குடன் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுடன் தளவாட, தொடர்பு சம்பந்தப்பட்ட உத்திகள் குறித்து அது ஒன்றிணைந்து செயல்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு குரங்கம்மைத் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் தடுப்பூசியைத் தயாரிக்கும் பவேரியன் நோர்டிக் நிறுவனமும் உறுதி அளித்துள்ளது.

புதிய கிருமிவகை ஆப்பிரிக்காவில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் குரங்கம்மைத் தொற்றை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக உலகச் சுகாதார நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது.

கடந்த வாரம் ஆப்பிரிக்காவில் கூடுதலாக 1,400 பேருக்குக் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டது.

இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து 12 ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை கிட்டத்தட்ட 19,000 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு அடிப்படையில் குரங்கம்மை பாதிப்பு 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

Exit mobile version