Site icon Tamil News

எவரெஸ்ட் மலையை விட மூன்று மடங்கு பெரிய வால் நட்சத்திரம் பூமி அருகே வெடித்து சிதறும் அபாயம்

எவரெஸ்ட் மலையை காட்டிலும் மூன்று மடங்கு பெரிய வால் நட்சத்திரம் ஒன்று விரைவில் பூமி அருகே வெடித்து சிதறும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானியல் அற்புதங்களில் ஒன்றாக வானியலாளர்கள் கணிக்கும் மிக முக்கிய பொருட்களில் ஒன்று வால் நட்சத்திரங்கள். ஹைட்ரஜன், ஐஸ் உள்ளிட்ட பொருட்களால் ஆன இந்த வால் நட்சத்திரங்கள், வான்வெளியில் சுற்றி வரும்போது, அவ்வப்போது அதில் உள்ள பொருட்கள் உராய்வு காரணமாக எரிந்து வால் போன்று காட்சியளிக்கும். பூமியை சுற்றிலும் ஏராளமான வால் நட்சத்திரங்கள் இவ்வாறு வானில் சுற்றி வருகின்றன. அதில் ஒன்று 12 பி பான்ஸ் புரூப்ஸ் என்று அழைக்கப்படும் ’டெவில்’ வால் நட்சத்திரமாகும்.

71 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரிய குடும்பத்திற்குள் இந்த வால் நட்சத்திரம் சுற்றி வரும். தற்போது இந்த வால் நட்சத்திரம் பூமியின் அருகே சுற்றி வருகிறது. வருகிற 2024ம் ஆண்டு ஜூன் மாதம், பூமியிலிருந்து 232 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் போது, இந்த வால்நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரம் 1812ம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்டது. அது முதல் தற்போது வரை இந்த வால் நட்சத்திரத்தின் பாதையை விஞ்ஞானிகள் தொடர்ந்து கணித்து வருகின்றனர்.

சுமார் 18.6 மைல்கள் சுற்றளவிற்கு இருக்கும் இந்த வால் நட்சத்திரம், பூமியில் உள்ள மிக உயர்ந்த மலைச்சிகரமான எவரெஸ்டை காட்டிலும் மூன்று மடங்கு பெரியது என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிறிய நகரத்தின் அளவிற்கு இந்த வால் நட்சத்திரம் பெரிதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சோடா கேன்களை போல அவ்வப்போது இந்த வால் நட்சத்திரம் தனக்குத்தானே வெடித்து வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு முறை இந்த வால் நட்சத்திரம் வெடித்து இருந்தது.

இந்நிலையில், மீண்டும் மூன்றாவது வெடிப்பு விரைவில் நிகழும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர். இந்த வெடிப்பு காரணமாக பெரிய அளவில் பாதிப்பு எதுவும் பூமிக்கு இருக்காது என அவர்கள் கணித்துள்ளனர். 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இந்த வால் நட்சத்திரம் செல்லும்போது, சூரிய கிரகணம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 2ம் திகதிக்கு பிறகு இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பூமியில் இருப்பவர்கள் பார்க்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஜாதக ரீதியாக வால்நட்சத்திரங்கள் வானிலை தோன்றுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. இதனால் இந்த வால்நட்சத்திரத்தின் பயணத்தை ஜோதிட ஆர்வலர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நன்றி – இந்துதமிழ்

Exit mobile version