Site icon Tamil News

சிங்கப்பூரில் பல மில்லியன் பணத்தைப் பறிகொடுத்த 6,600 பேர் – மக்களுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில் வேலை மோசடிக் கும்பல்கள் பல உத்திகளைப் பயன்படுத்திப் பொதுமக்களை ஏமாற்றி வருகின்ற நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2023) ஜனவரி தொடங்கி இப்போதுவரை குறைந்தது 6,600 பேர் வேலை மோசடிக் கும்பலிடம் பணத்தைப் பறிகொடுத்தனர்.

அதனால் ஏற்பட்ட நட்டம் 96.8 மில்லியன் வெள்ளி என சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசடிக்காரர்கள் முதலில் சிறு ஆய்வில் பங்கேற்குமாறு WhatsApp அல்லது Telegramஇல் தகவல் அனுப்புவார்கள்.

அதை முடிப்பவருக்குச் சிறு தொகையைச் சம்பளமாகக் கொடுப்பார்கள். நிறைய சம்பாதிக்கலாம் என்றுகூறி, மற்றொரு WhatsApp அல்லது Telegram குழுவில் அவர்களை இணைத்துக்கொள்வார்கள்.

அதில் கொடுக்கப்படும் வேலையின் ஒருபகுதியாக மோசடிக் கும்பல் கொடுக்கும் வங்கிக் கணக்கில் பணத்தைப் போட வேண்டும்.

செய்த வேலைக்கான சம்பளம் கைக்கு வராதபோதுதான் மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்டதைப் பெரும்பாலானவர்கள் உணர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே இணையம்வழி வேலை இருப்பதாகக் கூறி ஏமாற்றிப் பணம் பறிக்கும் மோசடிக் கும்பலிடம் கவனமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகம் எழுந்தால் 999 என்ற எண்ணில் பொலிஸாரை அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version