Site icon Tamil News

வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியரின் 20 பவுண் நகை கொள்ளை!

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று (26.09) தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் ஆசிரியர் ஒருவர் முருங்கன் பகுதியில் ஏறியுள்ளார்.

குறித்த பேருந்து வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாக பயணித்த போது குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். இதன்போது குறித்த பெண்ணின் கைப் பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் காணாமல் போனமையை அவதானித்துள்ளார். உடனடியாக பேருந்தை நிறுத்தி தேடிய போதும் நகை கிடைக்கவில்லை.

இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலகவின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனை போது  மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களுமாக 4 பேர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் திருடப்பட்டதாக கூறப்பட்ட 20 பவுண் நகை, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பறப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையின் பின் குறித்த நான்கு பேரையும் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version