Tamil News

19ம் ஆண்டு நினைவு;உறவுகளின் கண்ணீரால் நனைந்த முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்கள் நினைவாக முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு சுனாமி நினைவேந்தல் வளாகத்தில் இன்று சுனாமி நினைவேந்தலினுடைய 19 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றிருந்தது.

காலை 8 மணிக்கு இந்துமத வழிபாடுகள் இடம்பெற்றது. இந்துமத வழிபாடுகளை முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகர் கிருசாந் ஐயா அவர்கள் நிகழ்த்தினார்.

தொடர்ந்து இஸ்லாமிய மத வழிபாடுகள் 8.15 அளவில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது இஸ்லாமிய மத வழிபாடுகளை முல்லைத்தீவு ஜும்மா பள்ளிவாசல் மௌளவி ஜஸ்மின் அவர்கள் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து 8.45 மணியளவில் கிறிஸ்தவ மத வழிபாடுகள் ஆரம்பமாகி இடம்பெற்றது கிறிஸ்தவ மத வழிபாடுகளை மல்லாவி பங்குத்தந்தை பிலீப் அந்தோனி நேசன் குலாஸ் அவர்கள் நிகழ்த்தினார்.

அதனை தொடந்து தமது உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடர்களை ஏற்றி கண்ணீர் விட்டு கதறி அழுது மக்கள் தங்களது உணர்வுபூர்வமான அஞ்சலியை செலுத்தியிருந்தார்கள். நிகழ்வில் அரச அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உறவுகள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version