Site icon Tamil News

இந்தோனேஷியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழப்பு!

கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத்திலுள்ள ஒரு சட்டவிரோதத் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.காணாமல் போயுள்ள எழுவரைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சோலோக் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்தத் தங்கச் சுரங்கத்தில் வியாழக்கிழமை மாலை அவ்விபத்து நிகழ்ந்ததாக மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் இர்வான் எஃபெண்டி தெரிவித்தார்.

சாலை வழியாகச் செல்ல முடியாத நிலையில், மீட்புப் பணியினர் எட்டு மணி நேரம் மலையேறி மீட்புப் படையினர் அங்கு சென்றதாகத் திரு இர்வான் குறிப்பிட்டார்.

சம்பவம் நிகழ்ந்தபோது அச்சுரங்கத்தில் 25 பேர் இருந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அவர்களில் 15 பேர் இறந்துவிட்டனர், மூவர் காயமடைந்தனர், எழுவரைக் காணவில்லை.

காணாமல் போனோரைத் தேடும் பணியையும் உயிரிழந்தோரின் உடல்களை வெளியே கொண்டுவரும் பணியையும் வெள்ளிக்கிழமை காலையிலேயே காவல்துறையினரும் ராணுவத்தினரும் தொடங்கிவிட்டனர்.

இந்தோனீசியாவில் சிறிய அளவிலும் சட்டவிரோதமாகவும் நடக்கும் தங்கச் சுரங்கங்களில் அடிக்கடி விபத்து நேர்கிறது. தொலைவான, எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் இப்படிக் கனிமவளத்தை வெட்டி எடுக்கும் தொழில் நடப்பதால் அதிகாரிகளால் அதனை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

Exit mobile version