Tamil News

டெல்லியில் பாதாள சாக்கடை அருகே அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் சடலம்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடல் பல பாகங்களாக அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புது தில்லி கீதா காலனி பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அருகே மிகவும் அழுகிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து டெல்லி பொலிஸார் FIR பதிவு செய்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களின்படி, கண்டெடுக்கப்பட்ட சடலம் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த பகவத் லட்சுமீ என அடையாளம் காணப்பட்டுள்ளது. 66 வயதான பகவத் லட்சுமீ, சுற்றுலா விசாவில் பிப்ரவரி 6ம் திகதி இந்தியா வந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குற்றம் எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய காவல்துறை குழுக்கள் அப்பகுதியில் உள்ள CCTV கமெராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.குறித்த நபர் மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அப்பெண் காணாமல் போனாரா என்பதை அறியவும், வேறு ஏதேனும் தொடர்புடைய விவரங்களைக் கண்டறியவும் மொரிஷியஸ் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், நொய்டாவின் செக்டார் 8ல் உள்ள வாய்க்காலில் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட உடல் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அப்பெண் இறந்து ஐந்து நாட்கள் இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் குழு வரவழைக்கப்பட்டு, பாகங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version