Site icon Tamil News

இமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்த பெங்களூரு அணி

ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி, கேப்டன் டூ பிளெசிஸ் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

விராட் கோலி 44 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல்லும் அதிரடி காட்டினார். மறுமுனையில் டூபிளெசிஸ் 35 பந்துகளில் அரை சதம் கடந்து தனது அதிரடியை தொடர்ந்தார்.

மேக்ஸ்வெல், டூ பிளெசிஸ் இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் லக்னோ பந்துவீச்சாளர்கள் திணறினர். மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார்.

அவர் 59 ரன்கள் குவித்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. டூ பிளெசிஸ் 79 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்குகிறது.

Exit mobile version